ஒரு வரலாற்று ஆய்வாளன் போல் நானும் நாம் கதை பேசி நடந்த அந்த நீண்ட தெருவை மீண்டும் கடந்து பார்க்கிறேன் பல பத்தாண்டுகளுக்கு பிறகு. நாம் நடந்து சென்ற காலடி தடங்கள் கால ஓட்டத்தில் கரைந்து போனாலும் என் நினைவில் இன்னும்... நீ என் புத்தகங்களை சுமந்ததும் நான் உன் புன்னகையை சுமந்ததும் அந்த தேநீர் கடை மட்டும் மாறாமல் அப்படியே. நீண்ட தெருவின் முனை இரண்டாய் பிரியும் இடம் நாம் தினமும் பிரியும் இடம் மாலையில் கூடும் இடம் அன்பளிப்புகளையும், பார்வைகளையும் பரிமாறி கொண்ட இடமும் அதுவே. இன்று அங்கு புதியதாய் ஒரு வேகதடை நம் நினைவுகளுக்கு கட்டப்பட்ட சிறிய சமாதிபோல். எல்லா வாகனங்களும் ஒரு சில நொடிகள் தாமதித்தே செல்லுகின்றன அஞ்சலி செலுத்துவதுபோல் என் வாகனமும் அப்படித்தான் சென்றது அன்பே.
நம் இடையே இடைவெளி சிறிதெனினும் நான் கடக்க முடியா பெரும்தொலைவு என உணருகிறேன் இருளின் கானகத்தில் நுழைகிறேன் கண்ணீரை மறைத்து கொள்ள.